"தோல்வியை கண்டு பயப்பட்டால் இதுதான் நடக்கும்".. ஜிம்பாப்வே தொடருக்கு முன் கேப்டன் ஸ்ரேயாஸ் பேச்சு
புலவாயோ: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் சந்தித்த தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு ஒரு சிறந்த பாடம் என்றும், அதிலிருந்து மீண்டு வந்து ஜிம்பாப்வே டி20 தொடரில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசி இருக்கிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "இங்கிலாந்தில் எங்களுக்கு கடினமான காலம் அமைந்தது உண்மைதான். ஆனால், அதில் இருந்து நாங்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். ஒரு அணியாக வெளிநாடுகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களுக்குக் கிடைத்துள்ளது.

வீரர்கள் தோல்விக்கு பயந்து விளையாடக் கூடாது. அப்படி பயந்தால் தங்களை தற்காத்துக் கொள்ள மட்டுமே விளையாடுவார்களே தவிர, தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்த மாட்டார்கள். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல், தற்போதைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
மேலும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "இங்கிலாந்து தொடருக்குப் பிறகு கிடைத்த இடைவெளியில் வைபவ் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டிருப்பார். அவருக்கு நான் தனியாக எந்த அறிவுரையும் வழங்கத் தேவையில்லை" என்றார். மேலும் ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடைபோட முடியாது என்றும், அவர்களது அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தனது காயம் மற்றும் கேப்டன்சி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "காயத்தில் இருந்து மீண்டு வந்த காலம் என்னை மனரீதியாக மிகவும் வலுவாக்கியுள்ளது. இது மைதானத்தில் சவால்களை எதிர்கொள்ள எனக்கு அதிக நம்பிக்கையைத் தந்துள்ளது. ஜிம்பாப்வே தொடருக்குத் தயாராக எங்களுக்கு ஒரே ஒரு பயிற்சி மட்டுமே கிடைத்தது சவாலானது தான் என்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இதையெல்லாம் கடந்து சிறப்பாகச் செயல்படுவதே ஒரு நல்ல அணிக்கு அழகு" என்று கூறினார். 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஹராரே மைதானத்தில் ஜூலை 23 அன்று நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications

