ஆனந்தபூர்: துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான டீம் சி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டீம் டி அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த விஜய்குமார் வைஷக் அபாரமான பவுலிங்கில் சிக்கி பேட்ஸ்மேன்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தொடங்கியுள்ளது. 4 அணிகள் உருவாக்கப்பட்டு துலீப் டிராபி நடத்தப்படுகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டீம் டி அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான டீம் டி அணி களமிறங்கியுள்ளது. ஆனந்தபூர் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதில் டீம் சி அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், இந்திரஜித் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சந்தீப் வாரியர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் டீம் டி அணியில் சிஎஸ்கே நட்சத்திர வீரர் துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, சவுரப் குமார் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் இணைந்ததால், அடுத்த போட்டியில் சேர்க்கப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. தொடர்ந்து டீம் டி அணி சார்பாக அதர்வா தய்டே மற்றும் யாஷ் துபே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரை வீச அன்சுல் கம்போஜை அழைத்தார். அந்த ஓவரின் 5வது பந்திலேயே அதர்வா தய்டே 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பிட்ச் ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்ததை கணித்தே ருதுராஜ் கெய்க்வாட் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது தெரிய வந்தது. இதன்பின் உடனடியாக 2வது ஓவரை வீச விஜய்குமார் வைஷக்கை அழைத்தார். முதல் விக்கெட் வீழ்ந்ததும் உடனடியாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். இதன்பின் சில பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், விஜய்குமார் வைஷக் வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து அந்த ஓவரிலேயே நட்சத்திர வீரரான தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி வெளியேற, அன்சுல் கம்போஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே யாஷ் துபேவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டீம் டி அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்ரீகர் பரத் - ரிக்கி பூய் கூட்டணி களத்தில் இருந்தது. இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் ஹிமான்சு செளஹானை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அவர் வீசிய 11வது ஓவரில் ரிக்கி பூய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டீம் டி தடுமாற தொடங்கியது. இதனால் வேறு வழியில்லாமல் பரத் - அக்சர் படேல் கூட்டணி களத்தில் இருந்தது. இவர்கள் இருவரும் விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதோடு, ரன்களையும் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் முதல் நாளிலேயே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியின் கைகள் ஓங்கியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.