துபாய்: இந்திய அணியின் அனுபவ வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய ஒருநாள் அணியின் எதிர்கால கேப்டன், அதற்காகத்தான் அவருக்கு இந்தியா ஏ அணியின் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது என்ற ஊகம் பரவி வந்த நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சம்மட்டி அடியாக பதில் கூறி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று முன்தினம்தான் டெஸ்ட் அணியிலிருந்து சில மாதங்கள் விலகுவதாக பிசிசிஐ-க்கு கடிதம் எழுதினார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். அதனால் டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டன், ஒருநாள் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் என்ற ஊகங்கள் எழுந்தன.
இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். துபாயில் அணி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் பதவி, ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியின் எதிர்கால கேப்டன் என்பதை உறுதி செய்யாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "ஒருநாள் அணிக்கான தலைமை மாற்றம் குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எங்களது தற்போதைய கவனம் 2026 டி20 உலகக் கோப்பையிலும் மற்றும் டெஸ்ட் அணியில் நிலைத்தன்மையை உருவாக்குவதிலும் தான் உள்ளது. ஸ்ரேயாஸ் ஒரு சீனியர் வீரர், அவர் தனது ஐபிஎல் அணியை வழிநடத்துகிறார். அவர் இதற்கு முன்பும் இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதற்காக அவரை நாங்கள் கேப்டனாகப் பார்க்கிறோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் பல வீரர்களிடம் தலைமைப் பண்புகளைக் கண்டறிய முயற்சிக்கிறோம், இந்தியா 'ஏ' அதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்றார்.
"ஸ்ரேயாஸ் ஐயர், தனது சிவப்புப் பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சமீபத்தில் ஒரு முடிவை அறிவித்துள்ளார். அது எங்களுக்கு ஒரு தெளிவை வழங்கியுள்ளது. அவர் ஒருநாள் போட்டிகளில் மிக முக்கியமான வீரர். ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு அவருக்கு மூன்று போட்டிகள் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றும் அகர்கர் கூறினார்.
முன்னதாக, ஸ்ரேயாஸ் ஐயர் தனது தொடர்ச்சியான முதுகுவலி காரணமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்குத் தெரிவித்திருந்தார். 2023-ல் லண்டனில் அவருக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமாக இருப்பதால், அவர் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
இந்தச் சூழலில்தான், செப்டம்பர் 30 ஆம் தேதி கான்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். மேலும், அவரே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தடுமாறிய கருண் நாயர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் தேவதத் படிக்கல்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த சர்பராஸ் கான்-க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் பதோனி போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை முடிந்த பிறகு, திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சீனியர் அணியிலிருந்து இந்தியா 'ஏ' அணியுடன் இணைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.