ஜெய்ப்பூர்: "ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஒரே காரணத்திற்காக, ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என்று பேசுவதே ஒரு முட்டாள்தனமான விவாதம்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. குறிப்பாக, 2024-ல் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தந்து, 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஒரு சிறந்த கேப்டனை எப்படிப் புறக்கணிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இந்த விவாதத்திற்கு சந்தீப் சர்மா தனது கருத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சந்தீப் சர்மா, "ஐபிஎல்-ல் அவர் சிறப்பாகச் செயல்பட்டதால், அவரை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஐபிஎல் அணியை வழிநடத்துவதும், இந்திய தேசிய அணியை வழிநடத்துவதும் முற்றிலும் வேறான விஷயங்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சந்தீப் சர்மா, "பிசிசிஐ-க்கு அதன் சொந்த உள்ளூர் லீக் உள்ளது, சரிதானே? ஆனால், நீங்கள் ஒரு சர்வதேச அணியைத் தேர்வு செய்யும்போது, நாட்டிலுள்ள சிறந்த 15 வீரர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அந்த 15 வீரர்களைச் சிறப்பாக நிர்வகிக்கும் ஒருவரையே கேப்டனாகத் தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால், ஐபிஎல்-ல் உள்ளூர் வீரர்கள், இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என ஒரு கலவையான அணி இருக்கும். அதனால், ஐபிஎல்-ல் அவர் என்ன செய்தார் என்பதை வைத்து சர்வதேசப் போட்டிகளுக்கான கேப்டனைத் தேர்வு செய்யச் சொல்வது ஒரு அர்த்தமற்ற விவாதம்" என்று சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
சந்தீப் சர்மாவின் இந்தக் கருத்து ஒருபுறம் இருந்தாலும், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனைகள் சிறப்பாகவே உள்ளன. ஐபிஎல் மட்டுமல்லாது, உள்ளூர் போட்டிகளிலும் மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். 2024 சையத் முஷ்டாக் அலி டிராபியை மும்பை அணிக்கு வென்று கொடுத்தார்.
2024-25 விஜய் ஹசாரே டிராபியிலும் கேப்டனாக 5 போட்டிகளில் 325 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-ல் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். இருப்பினும், சந்தீப் சர்மா கூறுவது போல, சர்வதேசப் போட்டிகளின் அழுத்தம் மற்றும் சூழல் முற்றிலும் வேறுபட்டது. எனவே, ஐபிஎல் வெற்றிகளை மட்டும் அளவுகோலாக வைத்து ஒருவரை இந்திய அணியின் கேப்டனாக்கக் கோருவது சரியல்ல என்பதே அவரது வாதமாக உள்ளது.