அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைய முக்கிய காரணமே ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் தான். அவர் வெறும் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது. அதிலும் அவர் ஆட்டமிழந்த விதம் விமர்சனத்திற்கு உள்ளானது.
குறிப்பாக, 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எப்படி ஆட்டமிழந்தாரோ, அதேபோல இந்த முறையும் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு முறையுமே அவர் பந்தை சந்திக்கும்போது கவனமாக அதை எதிர்கொள்ளவில்லை. மிகவும் சாவகாசமாக, வலைப் பயிற்சிகளில் பேட்டிங் செய்வது போலவே பந்தை அணுகினார். அதுதான் விக்கெட் விழுவதற்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

இந்தப் போட்டியில் 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் ஆடிய நிலையில், இரண்டு விக்கெட் விழுந்த நிலையில் நான்காம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தாலும், அவர்கள் இருவரும் அதிக பந்துகளை வீணடித்தனர்.
அவர்கள் இருவருமே குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடினார்கள். அதனால் ரன் ரேட் அழுத்தம் இருந்தது. அப்போதுதான் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடுகளத்துக்கு வந்தார். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ரன் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அப்போது ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ட் மேன் திசைக்கு தட்டி விட நினைத்தார். ஆனால் அதை அவர் கவனமாக செய்யவில்லை. மிகவும் தாமதமாகவே பந்தை அடிக்க முற்பட்டார். அதனால் பந்து அவரது பேட்டின் விளிம்பில் பட்டது. நேராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா வசம் பந்து சென்றது.
அவர் அதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டார். அம்பயர் பந்து விளிம்பில் பட்டதா என உறுதியாக சொல்ல முடியாததால் அவுட் தர மறுத்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் தான் ஆட்டமிழந்ததை ஒப்புக்கொண்டு தாமதிக்காமல் களத்தை விட்டு வெளியேறினார்.
அந்த விக்கெட் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. அதன் பிறகு அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ரன் ரேட் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது, ஷஷாங்க் சிங் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.