மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஜாக்பாட் அடிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் கடந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்து இருந்தார். உள்ளூர் போட்டியில் விளையாடாததால் அவருக்குத் தண்டனை அளிக்கும் வகையில் பிசிசிஐ அந்த முடிவை எடுத்து இருந்தது.
அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சில காலம் இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் 195 ரன்கள் எடுத்திருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். அவரது சராசரி 48.75 ஆக உள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் அவர் இரண்டு அரை சதங்களை அடித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்னுக்கு மேல் ஸ்கோர் எடுத்து இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியும் தான் ஆடிய நான்கு போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு வெகுமதி அளிக்கும் வகையில் பிசிசிஐ அவருக்கு ஒப்பந்தம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்னதாக பிசிசிஐ ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்படும். ஆனால், தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருவதாலும், அதில் மூத்த வீரர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்த கேள்விகள் இருப்பதாலும் தற்காலிகமாக பிசிசிஐ ஒப்பந்தம் குறித்த முடிவை ஒத்தி வைத்துள்ளது நிர்வாகம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி முடிவில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட நிலையில் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் நீடிக்க முடியாத நிலை உள்ளது.
இந்திய அணியில் ஒரு வீரர் ஏ பிளஸ் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும் எனில் அவர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இது ஒரு புறம் இருக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது. அவருக்கு ஏ பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்படுமா அல்லது பி பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.
ஏனெனில், அவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவரைத் தவிர்த்து அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் பி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஏ பிளஸ் பிரிவில் பும்ரா இடம் பெற்று இருக்கிறார். அவர் அதே ஒப்பந்தத்தில் நீடிப்பார் என கூறப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து வருண் சக்கரவர்த்திக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.