
இந்தியா - ஆஸ்திரேலியா
இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 7 மாதங்களே இருப்பதால், இந்திய அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது இழப்புதான். அவர் விரைந்து காயத்தில் இருந்து குணமடைந்து வர வேண்டும். அவரின் இடத்தை நிரப்ப, இந்திய அணி தீர்வை கண்டறிய வேண்டும். அது எங்களின் பணி. அதேபோல் உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. பும்ரா நீண்ட காலமாக அணியில் இல்லை.

பும்ரா காயம்
இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்திய வீரர்கள் அனைவருமே அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அனைவரும் எண்ணற்ற ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். நிச்சயம் பும்ரா அணியில் இருப்பது சிறந்த மாற்றத்தை போட்டியில் ஏற்படுத்தும். ஆனால் பும்ராவின் இடத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக நிரப்புகிறார்கள்.

தொடக்க வீரர்கள்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை நடக்க உள்ள முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். மும்பை பிட்ச் வழக்கம் போலவே உள்ளது. இங்கு 7 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். மும்பை பிட்ச் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பை கொடுக்கும். அதுதான் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கப் போகிறது என்று தெரிவித்தார்.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு?
தொடக்க வீரர்களாக சுப்மன் கில், இஷான் கிஷன் களமிறங்க உள்ளதால், 3வது வீரராக வழக்கம் போல் விராட் கோலியும், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நீண்ட மாதங்களுக்கு பின் ஜடேஜா ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதால், அவரின் பேட்டிங் வரிசை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications