அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஆன சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அவர்கள், விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்து இருந்தனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.
ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையை செய்துள்ளனர். இந்த ஆண்டு அவர்கள் இருவரும் இணைந்து 839 ரன்கள் சேர்த்து இருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா 744 ரன்கள் எடுத்திருந்த சாதனையை முறியடித்துள்ளனர்.

மேலும் ஒரு சேசிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் என்ற மாபெரும் உலக சாதனையை செய்து இருக்கின்றனர். இது ஐபிஎல் மட்டுமின்றி உலக அளவிலும் சேசிங்கின் போது எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டணி ரன்கள் ஆகும். இதற்கு முன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் எடுத்திருந்த அதிகபட்ச ரன்கள் (203 ரன்கள்) என்ற பார்ட்னர்ஷிப் சாதனையை சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் 205 ரன்கள் எடுத்து முறியடித்து இருக்கின்றனர்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணி அமைத்த இரண்டாவது ஜோடி என்ற சாதனையையும் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் செய்துள்ளனர். விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இரண்டு முறை 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியை அமைத்துள்ளனர். அந்த சாதனையை இவர்கள் சமன் செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 65 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை அடித்தார்.