மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். இதன் காரணமாக அணியில் இருவரிடமும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவர் கேப்டன் இன்னொருவர் துணை கேப்டன் என்பதால் அணியில் நீடித்து வருகின்றனர்.
இல்லை என்றால் அணியை விட்டு எப்போது நீக்கப்பட்டிருப்பார்கள். குறிப்பாக கில் அணியில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இருக்கின்றார். இதன் காரணமாக பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் அணியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார். கில் கடந்த 15 இன்னிங்ஸில் மொத்தமாகவே 291 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார்.

இந்த 15 இன்னிங்ஸில் மொத்தமாகவே அவர் நான்கு சிக்சர்கள் தான் அடித்திருக்கின்றார். மூன்றாவது டி20 போட்டியிலும் அவர் 28 பந்துகளுக்கு 28 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதனால் அவர் அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுப்மன் கில்லின் நீண்ட கால நண்பரும் இந்திய அணியின் தொடக்க வீரருமான அபிஷேக் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கில் குறித்து பேசிய அவர், நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்கு வெளிப்படையாக சொல்கின்றேன். என்னை நம்புங்கள் சூரிய குமார் யாதவும், கில்லும் டி20 உலக கோப்பையை இந்திய அணிக்காக வென்று தருவார்கள்.
இந்தத் தொடரிலும் அவர்கள் நன்றாக செயல்படுவார்கள். ஏனென்றால் நான் என்னுடன் குழந்தை பருவத்தில் இருந்து விளையாடி வருகின்றேன். எனவே அவர் எந்த சூழ்நிலையிலும் அணிக்கு வெற்றியைத் தேடி தருவார் என்பது எனக்கு தெரியும். எனவே தொடக்கத்தில் இருந்து எனக்கு அவர் மீது அதீத நம்பிக்கை இருக்கின்றது.
எனவே ஒவ்வொருவரும் அவருடைய திறமையை டி20 போட்டிகளிலும் விரைவில் பார்ப்பீர்கள். அதிலிருந்து அவர் மீது நீங்களும் நம்பிக்கை வைப்பீர்கள் என்று அபிஷேக் ஷர்மா கூறினார். மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய அவர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாகவும், இதனால் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை எடுத்தால் பவர் பிளேவிலே போட்டியை முடித்து விடலாம் என்று தங்களுக்கு தெரியும் என்றும் அதுதான் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.