கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி தடுமாறி சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோமன் போவெல் ஆகியோரின் அதிரடியால், அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்த தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்தற்கு முக்கிய காரணம், தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பியது தான்.

சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் தொடர்ந்து தடுமாறி வந்தனர். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு மோசமாக சில போட்டிகள் அமைந்தது. ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டிற்கு வராததால் இந்திய வீரர்கள் கடுமையாக தடுமாறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், அறிமுக டி20 போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்பதற்காக சிக்சருக்கு துக்கி அடித்தார். ஆனால் பந்தின் வேகம் குறைவாக இருந்ததால், ஜெய்ஸ்வால் அடித்த பந்து கேட்ச் ஆனது. இதனால், அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுபுறும் சுப்மன் கில், இன்றைய ஆட்டத்தில் தனது அதிரடியை காட்டும் முனைப்பில் களமிறங்கி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். எனினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவருக்கு நெருக்கடி தரும் விதமாக பந்துவீசினர். முன்கே சொன்னது போல், பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள் போல், ஆடுகளத்தில் பட்டு பந்து பேட்டிற்கு வரவே இல்லை.
இதனால், சுப்மன் கில் அல்சாரி ஜோசப் வீசிய ஸ்லோ பந்தை, அதனை கணிக்காமல், அதனை தூக்கி அடித்து விட்டார். இதனால், எளிமதன கேட்ச் கொடுத்துவிட்டு கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்த தொடரில் கில் அடித்த ஸ்கோர் வெறும் 3, 7 மற்றும் 6 ரன்கள் தான். கில்லின் இந்த தடுமாற்றம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.