மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கப்பட வேண்டிய ஒரு வீரரைத்தான் கேப்டனாக நியமிக்கப் போகிறார்களா? என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் சுப்மன் கில்லிடம் இது குறித்துப் பேசி விட்டதாகவும், விரைவில் சுப்மன் கில்லை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், கடந்த நான்காண்டுகளாகக் கிரிக்கெட் விளையாடி வரும் சுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 35 என்ற சராசரியில் தான் பேட்டிங் செய்து வருகிறார். இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 1893 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 35.05 மட்டுமே. மேலும் ஐந்து சதங்கள் மற்றும் ஏழு அரை சதங்களை அடித்திருக்கிறார். இது மிகவும் சராசரியான பேட்டிங் மட்டுமே.

இதே போன்ற பேட்டிங் ஃபார்ம் காரணமாகத்தான் விராட் கோலி குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 29 என்பதாக உள்ளது. 29-க்கும் 35-க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. அப்படி இருக்கும்போது சுப்மன் கில்லை எப்படி எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அவருக்கு கேப்டன் பதவியை அளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று வெளிநாடுகளில் சுப்மன் கில் மிகவும் சராசரியான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது ஒட்டுமொத்த வெளிநாட்டு பேட்டிங் சராசரி 24.47 என்பதாக உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்துதான் சுப்மன் கில்லின் கேப்டன் பதவி தொடங்க உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில் அவரது பேட்டிங் சராசரி 14.66 என்பதுதான். இப்படி ஒரு மோசமான பேட்டிங் சராசரியை வைத்திருப்பவருக்கு எப்படி கேப்டன் பதவியை அளிக்க முடியும்? அவரால் கேப்டன் பதவியின் பணிச் சுமையை ஏற்றுக்கொண்டு, அத்துடன் தனது பேட்டிங்கையும் முன்னேற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் படுமோசமாக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணி கேப்டன் பதவி அளிக்கப்படுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, விராட் கோலி டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். 45-க்கும் அதிகமான பேட்டிங் சராசரியை வைத்திருந்தார். விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை கவனிக்கப்பட்டது. தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி கேப்டனாக மாறினார்.
சுப்மன் கில் விஷயத்தில் அப்படி எந்த விஷயமும் இல்லை. அவரது தலைமைப் பண்பு சிறப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு 2025 ஐபிஎல் தொடரைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதே சுப்மன் கில் 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் திணறினார்.
இந்த ஆண்டு அணித் தேர்வு நன்றாக இருப்பதால் குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளது. மற்றபடி சுப்மன் கில்லின் கேப்டன்சி தான் அதற்கு காரணம் எனத் தனியே கூற முடியாத நிலையே உள்ளது. இப்படி இருக்கும் நிலையில், சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படப் போவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.