மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், மும்பையின் ஜூஹூவில் ₹20.7 கோடிக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம் மும்பையின் ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் தரவு தளமான Zapkey வெளியிட்ட ஆவணங்களின்படி, ஜூஹூ-தாரா சாலையில் கட்டப்பட்டு வரும் 'பூஜா லூமினெயர்' அப்பார்ட்மண்டில் 12வது தளத்தில் இந்த சொகுசு பிளாட் அமைந்துள்ளது.

கில் இந்த சொத்துக்காக ₹1.24 கோடி முத்திரைக் கட்டணம் செலுத்தினார். ஒரு சதுர அடிக்கு ₹61,442 என்ற விலையில் நடந்துள்ள இந்த ஒப்பந்தம், ஜூஹூவின் பிரீமியம் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் தற்போதைய சந்தை விலைக்கு இணையாக உள்ளது.

இந்த குடியிருப்பு, திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி மற்றும் அவரது மகன் ஜாக்கி பக்னானி நிர்வகிக்கும் பூஜா லீஷர் அண்ட் லைஃப்ஸ்டைல் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது. 16 மாடிகளைக் கொண்ட 'லூமினெயர்' திட்டம் 2029 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளது.
வரும் மார்ச் 28 அன்று தொடங்கும் ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கில் தலைமை தாங்கவுள்ளார். இதன் மூலம், ரோஹித் ஷர்மா, ஜாகீர் கான் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற பல நடப்பு மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மும்பை ரியல் எஸ்டேட்டில் செய்துள்ளமுதலீடுகளுடன் தற்போது கில் இணைந்துள்ளார்.
வாசு பக்னானி, 1990களில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றவர். பாந்த்ரா, கார் மற்றும் ஜூஹூ போன்ற பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறார். இவரது மகன் ஜாக்கி மற்றும் மகள் தீப்ஷிகா குடும்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையின் பிரத்தியேக கடற்கரைப் பகுதியான ஜூஹூ, அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், காஜல், ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட், அனில் கபூர், ஷில்பா ஷெட்டி மற்றும் ரேகா போன்ற பல பாலிவுட் பிரபலங்களின் இல்லமாகும். இது ஸ்டார்களுக்கு விருப்பமான ஆடம்பர குடியிருப்பு மையமாகவும் விளங்குகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த சுப்மன் கில், தற்போது மும்பையில் வீடு வாங்கியதன் மூலம், இங்கு குடியேற போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.