மொஹாலி : இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 1,126 ரன்கள் குவித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் 25 ஆண்டுகால உலக சாதனையை முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் பேட்டிங்கில் 70.37 சராசரியுடன் 1126 ரன்கள் எடுத்துள்ளார். இதே காலகட்டத்தில் அவர் ஒரு இரட்டை சதம் உட்பட 4 சதங்களை அடித்து இருக்கிறார்.
இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் இன்னும் 768 ரன்கள் எடுத்தால், ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 1998 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 1,894 ரன்களுடன் இந்த உலக சாதனையை படைத்தார்.
அந்த ஆண்டு சச்சின் தான் விளையாடிய 34 போட்டிகளில், 65.31 என்ற சராசரியுடன் இந்த ரன்களை எடுத்திருந்தார். இந்த காலகட்டத்தில் சச்சின் 9 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடித்து இருந்தார். இது சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஆண்டு.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரர்களும் கூட சச்சின் டெண்டுல்கரின் இந்த உலக சாதனையை முறியடிக்க முயன்று தோற்றுள்ளனர்.
2019ல் ரோஹித் சர்மா ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 1490 ரன்கள் எடுத்திருந்தார். அந்த ஆண்டு அவர் உலகக் கோப்பையின் போது 5 சதங்களை அடித்து சிறந்த ஃபார்மில் இருந்தார். விராட் கோலி 2017ல் அதிகபட்சமாக 1460 ரன்கள் வரை எடுத்திருந்தார். இருவராலும் சச்சினின் சாதனையை நெருங்க முடியவில்லை.
இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சுப்மன் கில்-க்கு இப்போது கிடைத்துள்ளது, இந்த ஆண்டு, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளைத் தவிர, 2023 உலகக் கோப்பையில் குறைந்தபட்சம் 9 போட்டிகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
ஆக மொத்தம் 14 போட்டிகள் உள்ளன. அவர் பேட்டிங் செய்யும் வேகத்தைப் பார்த்தால், சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை அவரால் முறியடிக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதிலும் உலகக்கோப்பை தொடரிலேயே அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.