பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சுப்மன் கில் மாபெரும் சாதனையைப் படைத்திருக்கிறார். கபில் தேவ், விராட் கோலி, இம்ரான் கான் போன்ற ஆசியக் கேப்டன்கள் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க முடியாததை அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
ஆம், இங்கிலாந்து மண்ணில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை எந்த ஒரு ஆசிய அணியும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி மட்டுமே இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியிருந்தது. தற்போது ஒன்பதாவது முறையாக இந்த மைதானத்தில் விளையாடி, இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், ஆசிய அணிகள் மொத்தம் 19 முறை இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தன. தற்போது அதில் இந்திய அணி முதல் ஆசிய அணியாக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஆசிய அணிகளுக்கு எதிராக இது இங்கிலாந்து அணியின் கோட்டையாக இருந்தது. அதை இளம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி உடைத்து இருக்கிறது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் கேப்டன்சியில் மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்தார். மேலும், இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணிக்கு வெற்றி தேடி கொடுத்த இளம் கேப்டன் என்ற சாதனையையும் செய்திருக்கிறார்.
இந்த வெற்றியின் போது சுப்மன் கில்லின் வயது 25 ஆண்டுகள் 301 நாட்கள் என்பதாக இருந்தது. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 26 வயது 202 நாட்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றார். 1976ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்து மைதானத்தில் சுனில் கவாஸ்கர் அந்த வெற்றியைப் பெற்றிருந்தார். தற்போது 49 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்மன் கில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் சுப்மன் கில் பல்வேறு பேட்டிங் சாதனைகளையும் செய்திருந்தார்.