மும்பை: "அடுத்த விராட் கோலி", "இந்திய அணியின் வருங்கால கேப்டன்" எனப் புகழப்பட்ட சுப்மன் கில்லுக்கு, 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடமில்லை என்பதுதான் கிரிக்கெட் உலகின் தற்போதைய பெரிய விவாதமாக உள்ளது. உண்மையில், சுப்மன் கில்லை கடந்த சில மாதங்களாகவே பிசிசிஐ டி20 உலகக்கோப்பைக்காக தயார் செய்து வந்தது. அவருக்கு நிச்சயம் இடம் உண்டு என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சனிக்கிழமையன்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா அறிவித்த 15 பேர் கொண்ட உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், சுப்மன் கில்லின் பெயர் இல்லாதது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி. கடந்த சில மாதங்களாகவே, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைப் போலவே டி20 அணிக்கும் கில்லையே கேப்டனாக்க பிசிசிஐ காய்களை நகர்த்தி வந்தது. ஆனால், இப்போது அணியிலேயே இடமில்லை என்ற நிலைமை எப்படி உருவானது?

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 15 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் சுப்மன் கில், வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் ஒரு அரைசதம் கூட இல்லை என்பதுதான் சோகம். அவரது அதிகபட்ச ஸ்கோரே 47 ரன்கள்தான். 137 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினாலும், மேட்ச் வின்னராக அவரால் ஜொலிக்க முடியவில்லை.
இதன் விளைவு? சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரர் இடத்திற்கு வந்துவிட்டார். சையத் முஷ்டாக் அலி ட்ராபி ஃபைனலில் சதம் அடித்து மிரட்டிய இஷான் கிஷன், பேக்-அப் விக்கெட் கீப்பராக அணியில் இணைந்துள்ளார்.
அகர்கர் - கம்பீர் கூட்டணி சுப்மன் கில் மீது ஒரு தனிப்பட்ட திட்டமே வைத்திருந்தது. அதாவது, கடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி எப்படி நங்கூரமிட்டு நிதானமாக ஆடி அணியைத் தூக்கி நிறுத்தினாரோ, அதே பணியை கில்லுக்குக் கொடுக்க நினைத்தார்கள்.
எதிரணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வகையில் மற்றவர்கள் அதிரடியாக ஆட, கில் மட்டும் நிதானமாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக, ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே கில்லுக்கு இந்திய அணியில் இடம் உறுதி செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனிடம் கூட, "இந்திய அணியின் காம்பினேஷனுக்காக நீங்கள் ஐபிஎல்லில் மிடில் ஆர்டரில் இறங்கிப் பழகுங்கள்" என அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. "அதிரடியாக ஆடுவதா அல்லது விக்கெட் விழாமல் தடுப்பதா?" என்ற குழப்பத்திலேயே கில் சிக்கிக்கொண்டார். அணி நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒருவர் இதுகுறித்துச் சொல்லும்போது, "டி20 கிரிக்கெட் இப்போது முழுவதுமாக மாறிவிட்டது. முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில், கில்லால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பவர்-ஹிட்டிங் மற்றும் நிலைத்து ஆடுவது என இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாமல் அவர் திணறினார். இரண்டுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டதுதான் அவருக்கு வினையாக முடிந்தது" என்றார்.
ஐபிஎல் அரங்கில் கில் ஒரு ரன் மெஷின். கடந்த 6 சீசன்களாக தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் குவித்து வருகிறார். 2023-ல் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். நடந்து முடிந்த 2025 ஐபிஎல் சீசனில் கூட குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக 650 ரன்கள் விளாசினார். ஆனால், அந்த ஃபார்மை இந்திய அணியில் அவரால் கொண்டுவர முடியவில்லை.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் என இருவருமே ஃபார்மில் இல்லாதது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடியை உண்டாக்கியது. இது அணியின் ஒட்டுமொத்த ரன் குவிக்கும் வேகத்தையும் பாதித்தது. இறுதியில், எதிர்கால கேப்டன் கனவோடு வலம் வந்த சுப்மன் கில், இப்போது உலகக்கோப்பையை தொலைக்காட்சியில் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது.