சண்டிகர்: 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலிருந்து இளம் நட்சத்திரமும், துணைக் கேப்டனுமான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தேர்வுக்குழுவினரின் இந்த முடிவை மிகக் கடுமையாகச் சாடியதோடு, வழக்கம் போல முன்னாள் கேப்டன் கபில் தேவையும் விமர்சிக்கத் தவறவில்லை.
பத்திரிகையாளர் ரவிஷ் பிஷ்ட் உடனான பேட்டியில் பேசிய யோக்ராஜ் சிங், தேர்வுக்குழுவின் பாரபட்சமான போக்கைச் சாடினார். "சுப்மன் கில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தவர். வெறும் நான்கு அல்லது ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரை எப்படி உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்க முடியும்?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், 100 வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அதில் வெறும் 10 போட்டிகளில் ட்டுமே ஜொலித்த வீரர்களுக்கெல்லாம் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் நமக்குத் தெரியும். ஆனால் கில் போன்ற திறமையான வீரரை அவசரப்பட்டு நீக்கியது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் ஓரிரு போட்டிகளில் சொதப்பினால் அவரையும் தூக்கிவிடுவீர்களா?" என்றும் அவர் கேட்டார்.
யோக்ராஜ் சிங் எப்போது பேசினாலும், அதில் 1983 உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் மீதான விமர்சனம் இல்லாமல் இருப்பதில்லை. இம்முறையும் அது தொடர்ந்தது. "உங்களுக்கு அந்த 'மகத்தான' கபில் தேவ் உதாரணத்தையே கூறுகிறேன். பிஷன் சிங் பேடி கேப்டனாக இருந்தபோது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கபில் தேவ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் படுமோசமாகச் சொதப்பினார். ஆனாலும், அடுத்ததாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கும் பிஷன் சிங் பேடி அவரை அணிக்குள் கொண்டு சென்றார். அன்று கபில் தேவுக்குக் கிடைத்த அந்த ஆதரவு, இன்று கில்லுக்கு ஏன் கிடைக்கவில்லை?" என்று யோக்ராஜ் கேள்வி எழுப்பினார்.
யோக்ராஜ் சிங் சுப்மன் கில்லுக்கு ஆதரவாகப் பேசினாலும், கில்லின் சமீபத்திய ஃபார்ம் மிக மோசமாகவே உள்ளது என்பதே நிதர்சனம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 8 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடர் என எதிலுமே கில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்தத் தொடர் சறுக்கல்களே அவர் உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.