"300 ரன் எடுப்போம் என்று நம்பினோம் ஆனால்.." தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை விளாசிய சுப்மன் கில்
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங் குறித்து கேப்டன் சுப்மன் கில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி - ஸ்ரேயாஸ் கூட்டணியின் அபார ஆட்டத்தால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோலி 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். சில நிமிடங்களில் இந்திய அணி பெரும் சரிவை சந்தித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் போராடி 66 ரன்கள் எடுத்தார். அதனால் 300 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் இங்கிலாந்து எளிதாக இந்த இலக்கை எட்டி வென்றது.

இந்தப் போட்டிக்குப் பின்னர் கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது: "இது மிகவும் ஏமாற்றமளிக்கும் தோல்வி. ஆட்டத்தின் 25 ஓவர்கள் முடிந்த போது, நாங்கள் 300 அல்லது 310 ரன்கள் எடுப்போம் என்று நம்பினோம். நாங்கள் வலுவான நிலையில் தான் இருந்தோம், ஆனால் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், கீழ்-நடுவரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து நான் இன்னும் கூடுதல் பங்களிப்பை எதிர்பார்த்தேன். அவர்கள் கிடைத்த நல்ல தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை." என்றார்.
பேட்டிங் செய்யும் போது காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் குறித்துப் பேசிய கில், "அவர் பேட்டிங் செய்யும்போது ரன் ஓடிய போது காயமடைந்தார். அவர் பந்துவீசாதது எங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் எங்களது முக்கிய பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். முக்கிய வீரர் ஒருவரை இழக்கும் போது எங்களது திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தது" என்றார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமான ஜோ ரூட்டைப் பற்றி பேசிய கில், "ரூட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்தால், அவரை தவறான ஷாட்களை ஆட வைத்து இருக்கலாம். ஆனால் 240 ரன்கள் இலக்கை சேஸிங் செய்வதில் அவர் வல்லவர். ஓவருக்கு 4.5 அல்லது 5 ரன்கள் தேவைப்படும் போது அவரை தவறாக ஆடவைப்பது மிகவும் கடினம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications

