அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால், பந்துவீச்சின் போது, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன் குவிப்பைத் தடுப்பதற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதை அடுத்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ தண்டனை அளித்துள்ளது. அவருக்கு ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக ₹12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக ரன் குவித்து வந்தது. அந்த அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் வரிசையாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினர். டெல்லி அணியின் துவக்க வீரர் அபிஷேக் போரல் 9 பந்துகளில் 18 ரன்களும், கருண் நாயர் 18 பந்துகளில் 31 ரன்களும், கே.எல்.ராகுல் 14 பந்துகளில் 28 ரன்களும், அக்சர் படேல் 32 பந்துகளில் 39 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்களும், அஷுதோஷ் ஷர்மா 19 பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர். இதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தை குறைக்க சுப்மன் கில் பந்து வீச்சின் இடையே ஆலோசனைகளை அளிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை குஜராத் அணி வீசி முடிக்கவில்லை. அதற்குத் தான் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங் செய்தபோது, மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் 54 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 21 பந்துகளில் 36 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 34 பந்துகளில் 43 ரன்களும், ராகுல் டெவாடியா 3 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.