நண்பன் அபிஷேக் சர்மா ஓவரை பொளந்த சுப்மன் கில்.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்
மும்பை: 2026 ஷேர்-இ-பஞ்சாப் டி20 லீக் தொடரில், அமிர்தசரஸ் சூர்மாஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில், பாசில்கா பால்கன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 35 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அசத்தினார்.
கடந்த போட்டியை விட இப்போட்டியில் தனது ஸ்டிரைக் ரேட்டை 191.43 ஆக உயர்த்திய கில், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். எனினும், பத்தாவது ஓவரின் கடைசி பந்தில், தனது இந்திய அணி சக வீரரும் நண்பருமான அபிஷேக் சர்மாவின் பந்துவீச்சில், நமன் தீரிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

பால்கன்ஸ் அணியின் கேப்டனான கில், சூர்மாஸ் அணியின் கேப்டனான அபிஷேக் வீசிய 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். பத்தாவது ஓவரில் அபிஷேக்கின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை கில் பறக்கவிட்ட போதிலும், அந்த ஓவரின் இறுதிப் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அபிஷேக் அசத்தினார்.
இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கில் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது ஓவரில் விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழந்த பிறகு அவர் அதிரடிக்கு மாறினார். நமன் தீர் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்த அவர், 7 பந்துகளில் 14 ரன்களை எட்டினார். பின்னர் சாஹில் கான், ஜெய்பிரதாப் சிங் ஜோஹல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டார்.
தொடர்ந்து சுபம் ரானாவின் ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ரன் குவிப்பை வேகப்படுத்தி, வெறும் 28 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.கில் கடைசியாக கடந்த 2025 டிசம்பரில் தர்மசாலாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் 2026 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 700 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த போதிலும், டி20 இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும், அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிரான டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படவில்லை.சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணியை கில் வழிநடத்தினார்.
மேலும், அணியின் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக மும்பையில் நடந்த பிசிசிஐ கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்நிலையில், செப்டம்பர் 27 அன்று தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


