மத்திய அரசுக்கு வலிக்காமல் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அவரது பதிவில் மத்திய அரசு என்றோ, கல்வித் துறை என்றோ, நீட் தேர்வு தேவையில்லை என்றோ ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. பொத்தாம் பொதுவாக யாருக்கும் வலிக்காமல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சுப்மன் கில்.

இது பற்றி சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "ஒரு இளம் இந்தியனாக, நமது தலைமுறையினர் கல்வி கற்கவும், கனவுகளை நோக்கி செல்லவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் பற்றி குறிப்பிட்ட சுப்மன் கில், "அமைதியான வழியில் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கும் ஒவ்வொரு இளைஞரையும் நான் பெரிதும் மதிக்கிறேன். மரியாதையுடனும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இதில் இருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறார். ஆனால், இது நேரடியான ஆதரவாக இல்லை என்பதை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியது தான். அதே சமயம் இப்படி பூசி மெழுகி பதிவிட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், சுப்மன் கில் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறாரா? அல்லது அரசு நிலைப்பாட்டை ஆதரிக்கிறாரா? என்பதையும் தெளிவாக சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications

