மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு யுவராஜ் சிங் அவருக்கு வழிகாட்டியதுதான் காரணம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார். சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா போன்ற இந்திய அணி வீரர்கள் அவர்களது இளம் வயதில் இருந்தபோது யுவராஜ் சிங் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்.
அவர்கள் அண்டர் 19 அணியில் இருந்தபோது அவர்களை அழைத்து யுவராஜ் சிங் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளித்து வந்தார். 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பஞ்சாப் மாநில அணியைச் சேர்ந்த சில இளம் வீரர்களை தனது வீட்டிலேயே தங்க வைத்து சிறப்புப் பயிற்சிகளை அளித்தார். அதில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மாவும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சுப்மன் கில் இந்திய அணியின் முக்கிய வீரராக மாறினார். தற்போது அபிஷேக் ஷர்மா இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருக்கிறார்; ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் சுப்மன் கில் அடுத்த கட்டமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருப்பார்; அதிலிருந்து மாற்றம் இருக்காது என பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது பற்றி பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், "இன்று சுப்மன் கில் கேப்டனாக இருக்கிறார் என்றால், அவருக்கு நீண்ட காலம் கேப்டனாக இருப்பார். அதற்கு யுவராஜ் சிங் அளித்த ஆலோசனைகள் மிகப்பெரிய அளவில் காரணமாக இருந்துள்ளது. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த மூளையை உடைய யுவராஜ் சிங் போன்ற ஒருவர் சுப்மன் கில்லை தனது சிறகுக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம்," இவ்வாறு யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
தற்போது சுப்மன் கில் 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட உள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இது குறித்துப் பேசுகையில், "நாம் கேப்டன்களை ஒன்று அல்லது இரண்டு சுற்றுப்பயணங்களுக்காகத் தேர்வு செய்வதில்லை. நமது அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சில சமயம் இது போன்ற முதலீட்டை செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுப்மன் கில்லிடம் நல்ல முன்னேற்றம் உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உள்ள 5 போட்டிகள் நிச்சயம் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தனது பணியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அதனால்தான் அவரை கேப்டனாக தேர்வு செய்துள்ளோம்," என்றார்.