சென்னை: இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லின் பேட்டிங் அணுகுமுறை குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அபிஷேக் சர்மாவின் அதிரடியை 'புயல்' என்றும், சுப்மன் கில்லின் ஆட்டத்தை 'டேபிள் ஃபேன்' என்றும் ஒப்பிட்டுள்ள அவர், பவர்பிளே ஓவர்களில் இந்தியா அபிஷேக் சர்மாவை மட்டுமே அதீதமாக நம்பியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா என்ற வெற்றிகரமான தொடக்க ஜோடியை உடைத்து, சுப்மன் கில்லை தொடக்க வீரராகக் களமிறக்கிய இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், "அபிஷேக் சர்மா புயல் அடிக்கும்போது, இந்தியா பெரிய ஸ்கோரை எட்டுகிறது. உண்மையில், அபிஷேக் சர்மா - சுப்மன் கில் காம்பினேஷன், புயலின் போது இயங்கும் ஒரு டேபிள் ஃபேன் போல உணர்கிறேன். புயல் பலமாக அடிக்கும் நாட்களில், டேபிள் ஃபேன் நன்றாகச் செயல்படுவதாக நாமும் கருதுகிறோம். ஆனால், புயல் அடிக்காத நாட்களில், பவர்பிளேயில் டேபிள் ஃபேனிலிருந்து ஏன் காற்று வரவில்லை என்று நாம் கேட்போம்" என்று அவர் விமர்சித்தார்.
"ஒரு டி20 போட்டியில் பேட்டிங்கில் பவர்பிளே என்பது மிக முக்கியமான கட்டம். அபிஷேக் சர்மா போன்ற ஒரு வீரர் அந்தக் கட்டத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தினால், அது 'பவர்ஃபுல் பிளே' ஆக மாறும். ஆனால் அவர் ஆட்டமிழந்துவிட்டால், அது 'பவர்கட்' ஆகிவிடுகிறது. எனவே, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அபிஷேக் சர்மா இருப்பார்" என்று ரமேஷ் மேலும் கூறினார்.
துணை கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று, தொடக்க வீரராக மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, கில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில், அவர் 4 இன்னிங்ஸ்களில் 127.16 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சுப்மன் கில்லுக்குத் தொடக்கத்தில் இடம் கொடுப்பதற்காக, சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் வரிசையில் கீழே இறக்கப்பட்டார், பின்னர் அணியிலிருந்தே நீக்கப்பட்டார். இது, கடந்த 12 மாதங்களில் மூன்று சதங்கள் அடித்த ஒரு சிறந்த தொடக்க வீரரை இந்தியா இழந்ததாக அமைந்துள்ளது.
இதே கருத்தை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃபும் கூறி இருக்கிறார். சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதும், அவரை வருங்கால கேப்டனாக உருவாக்கும் திட்டமுமே சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட முக்கியக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
"சுப்மன் கில் துணை கேப்டனாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதால், சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் ஒரு சிறந்த ஃபினிஷராக ஜிதேஷ் சர்மா பார்க்கப்படுகிறார். ஆனால், கில் ஒரு வருங்கால கேப்டனாக வளர்க்கப்படுவதால், சஞ்சு தனது இடத்தைப் இழந்துள்ளார். சஞ்சுவின் ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. ஆனால், அணி நிர்வாகம் இப்போது பேட்டிங் ஆர்டர் இடங்களுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்கிறது" என்று கைஃப் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் கடைசிப் போட்டி இன்று (நவம்பர் 8) நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் தொடக்க ஜோடி மற்றும் அணித் தேர்வு குறித்த இந்த விவாதங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.