லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாகத் தடுமாறி வரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர், இளம் வீரர் சுப்மன் கில்லை கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் அடுத்த அனைத்து அணிகளின் கேப்டனாகக் கருதப்பட்டு வருகிறார் சுப்மன் கில்.
ஆனால், அவரது சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறை குறித்து மாண்டி பனேசர் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மாண்டி பனேசர், இது குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், "சுப்மன் கில் ஒன்றும் விராட் கோலி கிடையாது. கோலியிடம் இருந்த அந்தத் தீப்பொறியும், ஆக்ரோஷமும் கில்லிடம் இல்லை. கில் சற்று 'மெத்தனமாக' இருப்பதாகத் தெரிகிறது. விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று வரலாறு படைத்தார். அந்தளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது கில்லால் முடியாத காரியம்" என்று பனேசர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புவதற்கு ஐபிஎல் மற்றும் பணம் தான் முக்கிய காரணம் என்றும் பனேசர் குற்றம் சாட்டியுள்ளார். "இந்தியாவின் ரஞ்சி டிராபிக்கும், சர்வதேச டெஸ்ட் அணிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ரஞ்சி டிராபி தொடர் அமைப்பு மிகவும் பலவீனமாகிவிட்டது. இன்றைய இளம் வீரர்கள் ஐபிஎல் மூலம் கோடிகளில் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறார்கள்.
4 நாட்கள் வெயிலில் நின்று டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் கடின உழைப்பை அவர்கள் விரும்பவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கும் வீரர்களால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியவில்லை" என்று உண்மையை உடைத்துள்ளார் மாண்டி பனேசர்.
சுப்மன் கில்லை மையமாக வைத்து இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தாலும், அவரது சமீபத்திய ஆட்டம் மற்றும் ஆளுமைத் திறன் ஆகியவை கோலியின் நிழலைக் கூட தொட முடியவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 40 வெற்றிகளைத் தேடித்தந்தவர். அந்த மாபெரும் இடத்தை நிரப்புவது சுப்மன் கில்லுக்குச் சவாலான காரியம் மட்டுமல்ல, தற்போதைய நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாகவும் மாறி வருகிறது.