மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்க பிசிசிஐ தயாராகி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக நான்கு சதம், அதில் ஒரு இரட்டை சதம் என மொத்தமாக 754 ரன்கள் குவித்து அசத்தினார். அது மட்டுமில்லாமல் இந்திய அணியை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய வழிவகுத்தார்.

இதனால் கில் அந்தஸ்து பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இதனால் சுப்மன் கில்லுக்கு ஒரு நாள், டி20 போட்டியில் கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே கில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிசிசிஐ மீண்டும் ஒரு கௌரவத்தை அவருக்கு வழங்க உள்ளது. அதன்படி டி20 போட்டிகளில் இருந்து கில் அண்மையில் நீக்கப்பட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் அவருக்கு மீண்டும் டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்திய டி20 அணிக்கும் கில்லை புதிய கேப்டன் ஆக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய டி20 அணிக்கு துணை கேப்டன் ஆக கில்லை நியமிக்க தேர்வு குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூரிய குமார் யாதவிற்கு வயதாகி வரும் நிலையில் அவர் 2026 டி20 உலக கோப்பையுடன் சென்று விடுவார். அதன் பின் இந்திய டி20 அணியையும் வழிநடத்தும் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்படும். இதனால் கில் தற்போது இருந்தே டி20 போட்டிக்கும் தயாராகும் விதமாக பிசிசிஐ இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி இருக்கின்றது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் கில் கேப்டனாக உள்ள நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட போவது அவரின் பவர் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.