மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விராட் கோலி என்று ரசிகர்களால் புகழப் பெற்றவர் சுப்மன் கில், ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை கில் சொந்த மண்ணில் ரன்களை சேர்த்தாலும் வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் சுப்மன் கில்லின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. ரோகித் சர்மா, விராட் கோலிக்கு பிறகு கில் தான் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் விளையாடினார். 31, 28, 1, 20, 13 ஆகிய ரன்கள் தான் ஆஸ்திரேலிய மண்ணில் கில் அடித்து இருந்தார்.

இதன் காரணமாக கில் நான்காவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டாலும் ஐந்தாவது டெஸ்டில் அணிக்கு திரும்பி சொதப்பினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடி வந்த கில் இனி தான் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறேன் என்று கூறி புஜாராவின் இடத்திற்கு ஆப்பு வைத்தார். ஆனால் புஜாராவின் ஆட்டத்தில் பத்து சதவீதம் கூட களத்தில் கில் விளையாடியது இல்லை.
இதனால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக கில் நீக்கப்பட போகிறார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட கில், ஆர்வம் காட்டி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படாத நிலையில் அவர் ஓய்வில் தான் இருக்கிறார்.
இதன் காரணமாக ஜனவரி 23ஆம் தேதி தொடங்கும் ரஞ்சித் தொடரின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் களமிறங்கப் போகிறார்.
கர்நாடகா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடப் போகிறது. இந்த போட்டியில் கில் விளையாடுவார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கில் விளையாடப் போகிறார். கில் கடைசியாக கடந்த 2022 ஜூன் மாதம் மத்திய பிரதேச அணிக்கு எதிராக விளையாடினார். அதில் ஒன்பது மற்றும் 19 ரன்கள் தான் அடித்து இருந்தார்.
எனினும் கடந்த செப்டம்பர் மாதம் துலீப் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் டோமிஸ்டிக்கில் ஒரு போட்டியில் தான் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரோகித் சர்மா ரஞ்சித் கோப்பைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பட்டியலில் கில்லும் இணைந்திருக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல விஷயம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.