சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இந்திய அணியின் அறிவிக்கப்படாத துணை கேப்டனாக ஒரு இளம் வீரர் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பும்ராவுக்கு டெஸ்ட் அணி துணை கேப்டன் பதவி அளிக்கப்படாத நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் கேப்டனாக ரோஹித் சர்மா பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால், துணை கேப்டன் யார் என அறிவிக்கப்படவில்லை. முன்பு பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார். ஆனால், இந்த முறை யாரையும் துணை கேப்டன் என பெயரிடாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டன் ரோஹித் சர்மா உடன் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், போட்டியின் சூழ்நிலைக்கேற்ப சில சமயம் அவர் சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இருவரும் போட்டியின் இடையே தொடர்ந்து பேசி வருவதை சுட்டிக்காட்டி உள்ள விமர்சகர்கள் சுப்மன் கில் தான் டெஸ்ட் அணியின் அறிவிக்கப்படாத துணை கேப்டனாக இருக்கிறார், அவரை அடுத்த கேப்டனாக வளர்க்கவே ரோஹித் சர்மா அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என சுட்டிக் காட்டி உள்ளனர்.
மேலும், ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் இருப்பார். அதற்கு பயிற்சி பெறும் வகையிலேயே அவர் தற்போது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர். ஏற்கனவே, சுப்மன் கில் இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் தான் இருப்பார் என தெரிகிறது.
டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பிடிக்க பும்ரா ஆர்வமாக இருந்த நிலையில், அவருக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்து உள்ளது.