மும்பை: இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருந்தார். அவரது டி20 பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சனம் இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தனது நீக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் உள்ளூர் தொடர் ஒன்றில் பங்கேற்று தனது அதிரடி பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க உள்ளார்.
2025 - 26 விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்க வேண்டி சுப்மன் கில் தீவிர பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். ஒரு சர்வதேச தொடருக்கு தயார் ஆவது போல அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில்லுடன் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் விஜய் ஹசாரே ட்ராபியில் களமிறங்கத் தயாராகிவிட்டனர்.

உலகக்கோப்பையில் இடம் கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம் இருந்தாலும், வரப்போகும் நியூசிலாந்து தொடருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள உள்ளூர் போட்டிகளில் சுப்மன் கில் ஆர்வம் காட்டுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜனவரி 11ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாகத் தனது ஃபார்மை நிரூபிக்கவும், போட்டி பயிற்சிக்காகவும் சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடவுள்ளார். ஜனவரி 3 மற்றும் 6ம் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள சிக்கிம் மற்றும் கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கில் விளையாடவுள்ளார்.
தற்போது குரூப் சி-யில் இரண்டு வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கு கில்லின் வருகை பெரிய பலமாக இருக்கும். இரண்டு போட்டிகளை முடித்துவிட்டு, ஜனவரி 7 அல்லது 8ம் தேதி பரோடாவில் கூடும் இந்திய அணியுடன் அவர் இணைவார்.
சுப்மன் கில் மட்டுமல்ல, ரவீந்திர ஜடேஜாவும் சௌராஷ்டிரா அணிக்காகக் களமிறங்குகிறார். ஜனவரி 6 மற்றும் 8ம் தேதிகளில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஜடேஜா விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஆலூரில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதேபோல, கே.எல். ராகுலும் கர்நாடகா அணிக்காக ஜனவரி 3 and 6ம் தேதிகளில் திரிபுரா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக அகமதாபாத்தில் விளையாட வாய்ப்புள்ளது. கர்நாடகா அணி குரூப் ஏ-வில் 100% வெற்றி விகிதத்துடன் வலம் வருகிறது.
ஏற்கனவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐயின் உத்தரவுப்படி உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகின்றனர். ஜனவரி 6ம் தேதி டெல்லி அணி ரயில்வேஸை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி மீண்டும் களமிறங்கவுள்ளார். இது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், மும்பை அணியின் ஜெய்ஸ்வால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குணமடைந்து கோவாவுக்கு எதிரான போட்டிக்குத் திரும்பியுள்ளார். நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் வரிசைகட்டி நின்றாலும், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு மட்டும் பணிச்சுமை காரணமாக இதிலிருந்து விலக்கு அளிப்பட்டுள்ளது.