லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலியின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றுவதை செய்வதை நிறுத்திவிட்டு, தனது இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அறிவுறுத்தியுள்ளார். களத்தில் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது கில்லின் பேட்டிங்கிற்கு உதவவில்லை என்றும், அது அணியின் செயல்திறனை பாதிக்கிறது என்றும் திவாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற சுப்மன் கில், இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணியை மட்டுமே வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இளமைக் காலம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற கில், ஐபிஎல் 2025-க்குப் பிறகு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதால் அவரது இந்த குணம் அதிக கவனத்தைப் பெற்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் நேரத்தை வீணடிப்பதாகக் கருதிய கில், அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்.
இந்தச் சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், அந்தப் போட்டியில் இந்திய அணி நூலிழையில் தோல்வியடைந்தது, இந்தத் தோல்விக்கு கில்லின் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறையும் ஒரு காரணம் என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இதுபற்றி பேட்டியளித்த மனோஜ் திவாரி, "கேப்டன் சுப்மன் கில் விஷயங்களைக் கையாளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த காலத்தில் விராட் கோலி செய்ததை அவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை," என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "ஐபிஎல்-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, அவர் ஒரு ஆக்ரோஷமான மனநிலைக்குச் செல்வதையும், நடுவர்களுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். இது கில்லின் இயல்பு அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று திவாரி குறிப்பிட்டார்.
"டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்திய அணி இந்தத் தொடரை 2-1 என எளிதாக முன்னிலை பெற்றிருக்க முடியும். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல," என்றும் அவர் மேலும் கூறினார்.
ஸ்டம்ப் மைக்கில் பதிவாகும் உரையாடல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்தும் திவாரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும்போது ஆடியோவில் வரும் மொழி மற்றும் வார்த்தைகளில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இது ஒரு போக்காகிவிட்டது என்று நான் நினைக்கிறேன், ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்," என்று மனோஜ் திவாரி எச்சரித்தார்.