சென்னை : சுப்மன் கில் காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் எப்போது உலகக்கோப்பை போட்டிகளில் ஆட தயாராவார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி தன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது.

இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி சென்னையில் முகாமிட்டுள்ளது. அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் சென்னை வந்த பின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
அவரை பிசிசிஐ மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
ஆனாலும், அவர் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குவது கடினம் என முதற்கட்ட தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக யாரை ஆட வைப்பது என இந்திய அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய தகவல் ஒன்றில் சுப்மன் கில் தற்போது உடல்நலம் சரியில்லாமல் தான் இருக்கிறார். அவருக்கு டெங்கு இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயம் இது சாதாரணமான வைரல் காய்ச்சலாக இருக்கும் பட்சத்தில் அவரால் ஆன்டிபயாடிக் மருந்தை செலுத்திக் கொண்டு போட்டியில் விளையாட முடியும் என்றார்.
ஆனால், டெங்கு காய்ச்சலாக இருக்கும் பட்சத்தில் அவர் குணமாக குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும். அந்த நிலை ஏற்பட்டால் நிச்சயம் ஆஸ்திரேலியா போட்டி மட்டுமின்றி அடுத்து அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் போட்டி மற்றும் அக்டோபர் 14 நடைபெற உள்ள பாகிஸ்தான் போட்டியிலும் அவரால் ஆட முடியாது.

இதில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் முக்கியமானவை. அந்த போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் ஆடாமல் போனால் அது அணிக்கு பின்னடைவுதான். அவர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புதிய தலைவலியாக இப்போது யாரை துவக்க வீரராக ஆட வைக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.