மும்பை: 2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஐபிஎல் தொடர் முடியும் முன்பே இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்துக்குச் சென்று இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐபிஎல்-லில் விளையாடாத சில இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இந்தியா 'ஏ' அணியுடன் பயணம் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில், இந்தியா 'ஏ' அணிக்காக இரண்டு பயிற்சிப் போட்டிகளிலுமே விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுப்மன் கில்லின் வெளிநாட்டு டெஸ்ட் போட்டி பேட்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கும் நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில், அவர் குறைந்தபட்சம் ஒரு பயிற்சிப் போட்டியிலாவது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது 2025 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் இடம் பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. ஜூன் 3 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஜூன் 6 அன்று இந்தியா 'ஏ' மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணி விளையாடும் இரண்டாவது பயிற்சிப் போட்டி துவங்க உள்ளது.
முதல் பயிற்சிப் போட்டி மே 30 முதல் ஜூன் 2 வரை நடைபெற உள்ளது. இதில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் எந்த வீரரும் பங்கேற்க வாய்ப்பில்லை. ஆனால், இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருந்தன.
ஆனால், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அடுத்த இரண்டு நாட்களில் அவர் உடனடியாக இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டி இருக்கும். ஜூன் 3 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி விட்டு, ஜூன் 6 அன்று பயிற்சிப் போட்டியில் ஆட வேண்டி இருக்கும். அவருக்கு ஓய்வு கிடைக்காது.
அதனால் சுப்மன் கில் அழுத்தத்திற்கு உள்ளாவார். கேப்டன்சியின் பணிச்சுமையும் அவருக்கு அழுத்தத்தை அளிக்கும். எனவே, அவரை பயிற்சிப் போட்டியில் விளையாட வைக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
இதன் பிறகு இங்கிலாந்து லயன்ஸ் உடனான இரண்டாவது பயிற்சிப் போட்டி முடிந்தவுடன், இந்தியா 'ஏ' அணி மற்றும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளனர். அதில் மட்டுமே சுப்மன் கில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் சாய் சுதர்சனும் இதே நிலைக்கு ஆளாகி இருக்கிறார். அவரும் இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் விளையாட மாட்டார். இந்தியா 'ஏ' அணியுடன் நடைபெறும் பயிற்சிப் போட்டியில் மட்டுமே அவரும் விளையாடுவார்.
இது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கேப்டனுக்கே போதிய பயிற்சி இல்லாமல் எப்படி இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.