மும்பை: தோனியிடம் இருக்கும் திறமை மட்டும் சுப்மன் கில்லிடம் இருந்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக கில் இருப்பார் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கணித்துள்ளார். இந்திய அணியின் வீரர்களைக் கையாள்வதில் தோனி வல்லவர் என்று கூறிய அவர், களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சில தவறுகளைச் செய்திருந்தாலும், அடுத்த 2 போட்டிகளில் அசத்தலாக இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலியை சுப்மன் கில் கலாய்த்த விதம், விராட் கோலியை கண்முன் கொண்டு வந்தது.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில், அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். குஜராத் அணியில் இணைந்ததில் இருந்தே சுப்மன் கில்லுடன் பணியாற்றி வந்தவர் கேரி கிர்ஸ்டன். இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் கேரி கிர்ஸ்டன் முன்னிலையில் இருந்தவர்.
திறமையாளர்களைக் கண்டறிவதிலும், அணியில் நிலவும் சிக்கல்களையும் நேரடியாக தீர்ப்பவர் கேரி கிர்ஸ்டன். இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டன்சி குறித்து கேரி கிர்ஸ்டன் பேசுகையில், சுப்மன் கில்லின் கேப்டன்சியை மதிப்பிடுவது மிகவும் தவறான செயல். ஏனென்றால் சுப்மன் கில் 3 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலேயே சுப்மன் கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், திட்டம், எதிரணியின் பலம், பலவீனம் என்று கேப்டன்சி என்பது பல்வேறு விஷயங்களைச் சார்ந்த ஒன்று. சுப்மன் கில்லிடம் கிரிக்கெட் பற்றிய சிறந்த கற்றல் இருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார். சிறந்த பேட்ஸ்மேனுடம் கூட. கேப்டனாக வெல்ல வேண்டுமென்றால், பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
குறிப்பாக வீரர்களை பயன்படுத்துவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதுதான் தலைமைக்கான முக்கிய பண்பு. என்னைப் பொறுத்தவரை தோனி அதில் வல்லவர். தோனி அளவிற்கு சுப்மன் கில்லால் வீரர்களை கையாள தெரிந்தால், அட்டகாசமாக இருக்கும். இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு கேரி கிர்ஸ்டனும் முக்கியமான காரணம். அவருக்கும் தோனிக்கும் இடையில் இருந்த நட்பு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதேபோல் கேரி கிர்ஸ்டனின் திறமையறிந்து ஐபிஎல் தொடரிலும் பல்வேறு அணிகள் அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.