மும்பை: இந்திய டி20 உலககோப்பை அணியில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்காதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி கர்னல் அர்விந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இதுவும் ஒன்றுதான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான கில், ஐபிஎல் 2026-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டி20ஐ அணியின் துணை கேப்டனாக இருந்த கில், பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. இந்த முடிவை கில் பக்குவமாக ஏற்றுக்கொண்டதாகவும், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இதற்குப் பதிலளிப்பார் என்றும் அர்விந்தர் சிங் தெரிவித்தார்.

ஜூனியர் டைட்டன்ஸ் திட்டத்தின் மூன்றாவது சீசன் வெளியீட்டு நிகழ்வின் பேசிய அவர், "கில்லுக்கு தற்போது நடந்தது போல், சிறிய சரிவு எந்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்விலும் நடப்பது சகஜம். அவர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார். தேர்வாளர்களின் முடிவை அவர் மதிக்கிறார். எனக்கு அவரைத் தெரியும், அவர் இன்னும் வலுவாகத் கம்பேக் கொடுப்பார். இப்போது அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் முன்பை விட சிறந்த கிரிக்கெட் வீரராகத் திரும்புவார் என்பதை நீங்கள் காணலாம்" என்று குறிப்பிட்டார்.
சுப்மன் கில், 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் 869 ரன்கள் குவித்துள்ளார். எனினும், அவர் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதுவே தேர்வுக்குழுவினர் சஞ்சு சாம்சனை தொடக்க வரிசையில் தேர்வு செய்ய ஒரு காரணமாக அமைந்தது. ஆசிய கோப்பைக்கு முன், சாம்சனுக்குப் பதிலாக கில் மீண்டும் இந்திய டி20ஐ அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த மாற்றம் இந்தியாவின் அதிரடி ஆட்டப் பாணியைக் குலைத்ததால், டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்த முயற்சியை கைவிடத் தேர்வுக்குழுவினர் முடிவு செய்தனர்.
எனினும் கில்லின் திறமைகள் குறித்து அர்விந்தர் சிங் அசையாத நம்பிக்கை வெளிப்படுத்தினார். "ஒரு கிரிக்கெட் வீரராக அவரது தகுதிகள் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் மிக மிக மனதளவில் வலிமையான ஒரு விளையாட்டு வீரர். தனிப்பட்ட முறையில், அவர் மன ரீதியாக மிகவும் வலிமையானவர் என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
"அவரது திறமை மற்றும் திறன்கள் பற்றி நான் பேச சரியான நபர் அல்ல. சுப்மன் எவ்வளவு திறமையானவர் என்பதையும், எங்களுக்காகவும் நாட்டிற்காகவும் அவர் என்ன சாதித்துள்ளார் என்பதையும் உலகம் முழுவதுமே அறிந்திருக்கிறது" என்றும் சிங் தெரிவித்தார்.சாய் சுதர்சனின் காயம் குறித்தும் பேசிய அவர், “சாய் முழுமையாக ஃபிட்டாக இருப்பார். இது ஒன்றும் தீவிரமான காயம் இல்லை… மருத்துவ ரீதியாக அவர்கள் அதை ஒரு சிறு காயம் என்று விவரிக்கிறார்கள். இது முழுமையான எலும்பு முறிவு அல்ல” என்று சிங் விளக்கமளித்தார்.
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த சிங், "குஜராத் டைட்டன்ஸ் சற்றே வித்தியாசமான முறையில் இயங்குகிறது. அணி எப்படி இருக்கும், அணியின் அமைப்பு எப்படி இருக்கும், எந்த மாதிரியான திறமைகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்பதையெல்லாம் நாங்கள் கவனிக்கிறோம். பயிற்சி குழுவினர் ஷெர்ஃபேனை விடுவிக்கலாம் என்று முடிவெடுத்திருந்தனர். அவருக்கு நாங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் என்பது தனிப்பட்ட வீரர்களை மட்டும் கவனிக்கும் அணி அல்ல" என்று அவர் விளக்கமளித்தார்.