ஜெய்ப்பூர்: இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் சுப்மன் கில், 2025-26 விஜய் ஹசாரே தொடரின் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக இன்று விளையாடினார். ஜெய்ப்பூரில் நடைபெற்நற இந்தப் போட்டியில் கோவா அணிக்கு எதிராக 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கில், 12 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
கடந்த மாதம் இந்திய டி20 உலகக் கோப்பை 2026 அணியில் இருந்து நீக்கப்பட்ட 26 வயதான தொடக்க வீரர் கில், பஞ்சாப் அணிக்காக ஆடினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஐந்தாவது ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். வசுக்கி கௌசிக்கின் பந்தில், சுயாஷ் பிரபுதேசாய் கேட்ச் பிடிக்க கில் ஆட்டமிழந்தார். வெளியேறும் முன் இரண்டு பவுண்டரிகளை அவர் அடித்திருந்தார்.

முன்னதாக கோவா அணியில் தொடக்க வீரராக சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கிய நிலையில், அவர் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்தார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அறிமுகமான கில், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 8) மும்பைக்கு எதிரான பஞ்சாப்பின் கடைசி எலைட் குரூப் சி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
விஜய் ஹசாரே டிராபியில் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாடுவது கட்டாயம் என பிசிசிஐ விதித்துள்ளது.ஆனால், ஜனவரி 11 முதல் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளதால், கில் ஜெய்ப்பூரில் உள்ள பஞ்சாப் அணியின் முகாமை விட்டு வெளியேறி வதோதராவில் உள்ள இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில்லின் ஏமாற்றமான ஆட்டத்திற்கு மாறாக, இந்திய ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதே செவ்வாய்க்கிழமை களம் கண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய அவர், தனது பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார். சுப்மன் கில் ஓய்வுக்கு பிறகு தற்போது களத்திற்கு திரும்பி இருக்கிறார். இதனால், அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமே தவிர, அவர் நியூசிலாந்து தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 58 ஒருநாள் போட்டியில் விளையாடி 2818 ரன்களை அடித்துள்ளார். இதில் 8 சதம், 15 அரைசதம் அடங்கும்.