சண்டிகர்: இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் கவனத்தை உள்ளூர் கிரிக்கெட் மற்றும் தீவிர பயிற்சியின் பக்கம் திருப்பியிருக்கிறார் இந்திய அணியின் 'கேப்டன்' சுப்மன் கில். 2026-ம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது, இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான சுப்மன் கில்லின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லாததுதான்.
தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் துணை கேப்டனாகச் செயல்பட்ட சுப்மன் கில், சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பைத் தொடரில் அணியில் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வுக் குழு அவரை ஓரம் கட்டியது மட்டுமல்லாமல், அக்சர் படேலை துணை கேப்டனாகவும் நியமித்தது. இந்தத் திடீர் நீக்கத்தால் உண்டான ஏமாற்றத்தை மனதில் வைத்து, இப்போது மீண்டும் தன் பேட்டிங் திறனை மெருகேற்றும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கில்.

டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட சோகம் ஒருபுறம் இருந்தாலும், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டார் சுப்மன் கில். மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆஃப் சைடு மற்றும் லெக் சைடு என மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ஷாட்களை பறக்கவிட்டு, புத்தாண்டிற்குத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் அணியில் இடம்பிடித்துள்ளார். 50 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அவர் தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிகிறது.
அதற்கு முன் போட்டிக்குத் தேவையான உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடவும் கில் சம்மதித்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் கில் விளையாடவில்லை என்றாலும், டிசம்பர் 26-ம் தேதி (இன்று) ஜெய்ப்பூரில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பிசிசிஐ தேர்வுக் குழு கொடுத்த அதிர்ச்சியிலிருந்து கில் மீள்வதற்குள், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அடுத்த விமர்சனத்தை இறக்கியுள்ளார். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு, ஒரு கற்பனை அணியை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்தார். ஆச்சரியம் என்னவென்றால், அந்த 15 பேர் கொண்ட மாற்று அணியில் கூட சுப்மன் கில்லுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்த சோப்ரா, "இந்தியாவின் தற்போதைய டி20 அணியில் நிதானமாக, நங்கூரமிட்டு ஆடுபவர்களுக்கு வேலையில்லை எனத் தேர்வுக் குழு நினைக்கும்போது, நானும் ஏன் அப்படி ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்?" என சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் சிறந்த 30 டி20 வீரர்களின் பட்டியலிலும் கில் இல்லை என்பதை சோப்ரா மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆசியக் கோப்பையின் போது கில் மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியது, அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் என்ற வெற்றிகரமான துவக்க ஜோடியைப் பிரித்தது. துணை கேப்டனாகப் பொறுப்பேற்ற கில்லின் ஆட்டம் சற்று மந்தமாகவே இருந்தது. இதனால் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்குத் தள்ளப்பட்டார். ஃபினிஷராக கலக்க வேண்டிய ரிங்கு சிங்கிற்கான வாய்ப்புகளும் குறைந்தன.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியானதே, தற்போது உலகக்கோப்பை அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சரிவுகள் சகஜம் தான், ஆனால் இந்த விமர்சனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் தனது பேட் மூலம் கில் பதிலடி கொடுப்பாரா என்று பார்க்கலாம்.