IND vs AFG: இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தேன்.. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்
லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசுவதே தனது இலக்காக இருந்தது என்று இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். லக்னோவின் கடுமையான வெயிலில் விளையாடியபோது ஏற்பட்ட சவால்கள் மற்றும் தனது மனநிலை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக ஆப்கானிஸ்தான் எடுத்த முடிவு அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 402 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய இஷான் கிஷன், தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

கடும் வெயிலும் உடல்நல சவால்களும்
போட்டி முழுவதும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், இரு அணிகளையும் சேர்ந்த பல வீரர்கள் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டனர். வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க ஷுப்மன் கில் கழுத்தில் ஐஸ் காலர் (ice collar) அணிந்து பேட்டிங் செய்தார். மேலும், ஆட்டமிழந்த பிறகு அவர் ஃபீல்டிங் செய்ய மைதானத்திற்கு வரவில்லை.
போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய கில், "ஆம், நான் இரட்டைச் சதத்தை இலக்காகக் கொண்டுதான் விளையாடினேன். ஆனால், அணியின் ஸ்கோரை 430, 440 அல்லது 450 ரன்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் தொடர்ந்து ஷாட்களை ஆட வேண்டியிருந்தது. தற்போது எனது பேட்டிங் மிகச் சிறந்த நிலையில் உள்ளதாக உணர்கிறேன். நான் நினைத்த திசையில் பந்தை அடிக்க முடிகிறது, முதல் பந்திலிருந்தே மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினேன்" என்றார்.
224 ரன்கள் பார்ட்னர்ஷிப்
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் மற்றும் கிஷன், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்து வெறும் 141 பந்துகளில் 224 ரன்கள் குவித்து அசத்தினர். இவர்களின் அதிரடி பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
"வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மைதானத்தில் இருந்து வெளியேறும்போது உடல் முழுவதும் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 முதல் 45 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ததால் உடலின் பல்வேறு பகுதிகளில் தசைப்பிடிப்பு இருந்தது. ஆனால் இப்போது உடல்நிலை நன்றாக உள்ளது. பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைக்கும்போதெல்லாம், அதை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும், 40-45 ஓவர்கள் வரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்பதை ஒரு வழக்கமாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்," என்று ஷுப்மன் கில் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications
