மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தை அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்த்த சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என்று இந்தியா அணியின் ரன் மெஷின் வரிசையில் புதிய வீரராக இணைந்துள்ளார் சுப்மன் கில். வெறும் 24 வயதில் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 5 சதங்கள், 9 அரைசதங்களை விளாசி தள்ளியுள்ளார். நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இதனால் சாதாரணமாகவே ருத்ரதாண்டவம் ஆடும் சுப்மன், தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில்லின் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரும் சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்தனர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணி வெற்றிபெற 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். சிறு வயதில் இருந்தே விளையாடிய மைதானம் என்பதால் சுப்மன் கில்லின் ஆட்டம் அதிரடியாக அமைந்தது.
ஸ்டாய்னிஸ் வீசிய 4வது ஓவரிலேயே பவுண்டரி, சிக்சர் அடித்து தனது அதிரடியை தொடங்கினார். பின்னர் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் அடக்கி வாசித்தாலும் கேமரூன் க்ரீன் மற்றும் ஷார்ட் ஆகியோரின் பந்துவீச்சில் வெளுத்து கட்டினார். ஷார்ட் பந்துவீச்சில் சிக்சர் அடித்து தனது அரைசதத்தை 37 பந்துகளில் எட்டினார் சுப்மன் கில்.
இதனால் இது ஒருநாள் போட்டியா அல்லது டி20 ஆட்டமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இவரின் அதிரடி காரணமாக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 92 பந்துகளிலேயே 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சொந்த மண்ணில் சதம் விளாசுவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், 63 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.