சிங்கம் களமிறங்கிடுச்சி.. பயிற்சியை தொடங்கிய கேப்டன் சுப்மன் கில்.. முதல் டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு
கொழும்பு: விரல் காயம் காரணமாக இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இருந்து விலகியிருந்த இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தற்போது மீண்டும் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கினார்.
கொழும்பில் உள்ள நோன்டெஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் இதர வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கில் வலைப்பயிற்சியில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ளும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கில் மீண்டும் பேட்டிங் செய்யத் தொடங்கியிருப்பது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படகிறது. ஆகஸ்ட் 15 முதல் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் விளங்குவார்.
ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பி. சாய் சுதர்சன் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில், கில்லின் பேட்டிங்கையும் இழக்கக்கூடிய சூழல் இந்திய அணிக்கு உருவானது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, முதல் இரண்டு இடங்களுக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், இலங்கைக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகும்.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2025 மே மாதம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், சமீபகாலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்திய அணியின் பொறுப்பை ஏற்றதில் இருந்து, கில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 950 ரன்கள் குவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அதிக ரன் குவித்த வீரராகத் திகழும் கில் மீது இந்த இலங்கைத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications

