பெங்களூரு: யோ-யோ டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை விடவும் அதிக புள்ளிகளை இளம் வீரர் எடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் மொத்தமாக 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 6 நாட்கள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 முறை ஆசியக் கோப்பையை இந்திய தவறவிட்ட நிலையில், இம்முறை மிஸ் ஆகக் கூடாது என்று இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பயிற்சி முகாமின் முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்களுக்கு யோயோ டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் 2 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடவில்லை என்றால், அடுத்தப் போட்டியில் களமிறங்குவதற்கு முன் யோயோ டெஸ்ட் வைக்கப்படும். இதனை என்சிஏ தலைமையிலான குழு மேற்கொள்ளும்.
அந்த வகையில் யோயோ டெஸ்டில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 16.5 புள்ளிகளை பெற வேண்டும் என்பது கட்டாயம். அதில் விராட் கோலி 17.3 புள்ளிகளை பெற்று அசத்தினார். வழக்கமாக யோயோ டெஸ்டில் பெறும் புள்ளிகளை வீரர்கள் வெளியில் சொல்லக் கூடாது. ஆனால் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதால், பிசிசிஐ தரப்பில் உடனடியாக விராட் கோலிக்கு வார்னிங் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் யோயோ டெஸ்டில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பாஸ் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 18.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இது விராட் கோலி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஃபிட்னஸ் என்று வந்துவிட்டால், விராட் கோலி புலியாக மாறிவிடுவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் 2 கிலோ இடைவெளியிலேயே எடையை வைத்துள்ளார்.
இதனால் யோயோ டெஸ்டில் விராட் கோலி சறுக்கியது எப்படி என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில்லின் ஃபிட்னஸ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வருகின்றனர்.