மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், 2025ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்த ஒரே இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவரது பேட்டிங் அசுரத்தனமாக இருந்து வருவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர், சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சி பலரின் பாராட்டுகளைப் பெற்றது. "சொந்த மண்ணில், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் மட்டுமே ரன் அடிப்பார்" (flat track bully) என்பன போன்ற விமர்சனங்களுக்குத் தனது பேட் மூலமாகவே பதிலடி கொடுத்தார் கில்.

ஆசியாவுக்கு வெளியே 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட 40 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்ற விமர்சனத்துடன் இங்கிலாந்து தொடருக்குள் நுழைந்த சுப்மன் கில், அந்த குறையைத் தீர்க்கும் வகையில் ரன் மழை பொழிந்தார்.
இந்தத் தொடரில், 5 போட்டிகளில் விளையாடிய அவர், 75.40 என்ற அபாரமான சராசரியுடன் 754 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சதங்களும், 269 என்ற அவரது அதிகபட்ச ஸ்கோரும் அடங்கும். இதன் மூலம், 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததோடு, தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
இந்த ஆண்டில் இதுவரை, சுப்மன் கில் 14 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,234 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 64.94 ஆக உள்ளது. இதில் ஆறு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் அவரையே சாரும். உலக அளவில், இங்கிலாந்தின் பென் டக்கெட் 1,290 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தாலும், கில் அவரை நெருங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய வீரர்களில் வேறு யாரும் கில்லின் அருகில் கூட இல்லை. கே.எல். ராகுல் 741 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 605 ரன்களுடனும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
2023ஆம் ஆண்டில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்ததில் இருந்து, சுப்மன் கில் தான் உலக அளவில் அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரராகத் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 சர்வதேச போட்டிகளில் விளையாடி 16 சதங்களுடன் 4,577 ரன்களை அவர் குவித்துள்ளார்.
இதன் மூலம் அவரது ஃபார்ம் சிறப்பாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய நான்காம் வரிசையில், சுப்மன் கில் தனது இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளார்.