மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவை அடுத்து, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2025 பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை அறிவித்து உள்ளது. இந்த முறை சுப்மன் கில் அந்த விருதை வென்றார். இந்த மாதாந்திர ஒருநாள் போட்டி விருதை அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பாபர் அசாம் உடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் சுப்மன் கில்.
2025 பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதற்கு முன்பு அனைத்து அணிகளும் அந்த தொடருக்கு தயாராக வேண்டி பல்வேறு ஒரு நாள் தொடர்களில் விளையாடினர். அந்தப் போட்டிகளில் அவர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரரை தேர்வு செய்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

மூன்று வீரர்கள் முதலில் சிறந்த வீரருக்கான பட்டியலில் முன்மொழியப்பட்டனர். இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகிய மூவரும் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான உத்தேச பட்டியலில் இடம் பிடித்தனர்.
இவர்களில் சுப்மன் கில் பிப்ரவரி மாதம் 5 போட்டிகளில் விளையாடி 406 ரன்களை சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 101.5 என்பதாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 94.19 என்பதாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 50 ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை குவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் முதல் ஒருநாள் போட்டியில் 87 ரன்கள், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 60 ரன்கள், மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் 112 ரன்கள் குவித்து இருந்தார். இதை அடுத்து அவரது சிறந்த செயல்பாட்டுக்காக பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி ஒருநாள் போட்டி சிறந்த வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பரில் சுப்மன் கில் சிறந்த ஐசிசி ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுகளை வென்று இருக்கிறார். இந்த விருதை மூன்று முறை வென்று, அதிக முறை இந்த விருதை வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பாபர் அசாம் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் சுப்மன் கில். மேலும், இந்த விருதை அதிக முறை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்தார்.