போர்ட் ஆப் ஸ்பெயின் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதை அடுத்து தற்போது புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் தொடக்க வீரராக சுப்மன் கில்லும், மூன்றாவது வீரராக ஜெயஸ்வாலும் களம் இறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது.
ஆனால் கில், டிராவிட்டிடமும் ரோகித் சர்மாவிடமும் சென்று தான் மூன்றாவது வரிசையில் களமிறங்கினால் இந்திய அணிக்காக மேலும் சிறப்பாக விளையாட முடியும் என்றும், இதனால் தான் இனி தொடக்க வீரராக களமிறங்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும், சுப்மன் கில் மூன்றாவது வீரராகவும் களம் இறக்கப்பட்டனர். ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் நடு வரிசையில் தான் விளையாடி இருக்கிறார். இதனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மூன்றாவது வீரராக கில் பெரியதாக சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து பெயர் வாங்கிய நிலையில் கில், மூன்றாவது வீரராக களம் இறங்கி வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இதில் இரண்டு பவுண்டரிகளை கூட கில் அடித்தார்.
இதனால் கில் மூன்றாவது வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்தாவது லைன் ஸ்டெம்பில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு கில் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். வெறும் 12 ரன்களை மட்டுமே கில் எதிர்கொண்டு இருந்தார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை சொதப்பியதால் தற்போது கில்லுக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் கில் சொந்த காசிலே சூனியம் வைத்துக் கொண்டார் என்று ரசிகர்களும் கிண்டல் செய்து வருகிறார்கள். நம்பர் மூன்றாவது வரிசையில் புஜாரா போன்ற வீரர்கள் பந்தை சாப்பிட்டு ரன் சேர்ப்பார். ஆனால் கில் வந்த வேகத்தில் தொடர்ந்து இரண்டு இன்னிங்சிலும் வெளியேறி இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.