மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிக்கும் சுப்மன் கில் தான் கேப்டனாக இருக்கப் போவதாக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக விளங்கி வந்த கில் திடீரென்று ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
அது மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக பதவி ஏற்றார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக குஜராத் அணிக்கு செயல்பட்டதில் பெரிய அளவில் ஏதும் சாதிக்கவில்லை.

இதுதான் கில்லை வைத்து பிசிசிஐ மேற்கொள்ளும் முயற்சி தவறு என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் வெளியிட்டுள்ள கருத்தில், முதன் முதலாக நான் கில்லை பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பார்த்தேன். அப்போது என் மனதில் தோன்றியது இதுதான்.
இவர் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு ஸ்பெஷல் வீரராக இருக்கப் போகிறார் என்று அனைவரும் போலவும் நானும் நினைத்தேன். அவர் பேட்டிங் செய்யும் இடத்தை பார்த்தவுடன் திறமை வாய்ந்த சிறுவனாக இருக்கிறார். தன்னுடைய விளையாட்டை நன்கு புரிந்து கொண்டு விளையாடுகிறார். பேட்டிங்கில் எந்த இடத்தில் களம் இறங்க சொன்னாலும் அதனை செய்வார், சவால்களைக் கண்டு அஞ்ச மாட்டார் என்று நினைத்தேன்.
அது மட்டுமல்லாமல் கேப்டன்சி என்பது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அதேபோன்று கில்லும் கேப்டனாக மாறினால் அவருடைய சிறந்த செயல்பாடு வெளிப்படும். அவர் இன்னும் கேப்டனாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதற்கான பண்பு நிச்சயம் கில்லிடம் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
மற்ற வீரர்களை தலைமை தாங்கி விளையாடுங்கள் என்று கூறும் போது உங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படும். அது கில் போன்ற வீரருக்கு சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக கில் இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பார் என்று விக்ரம் ராத்தோர் தெரிவித்துள்ளார். இதுவரை 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1584 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.