மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பதவி ஏற்றுள்ள சுப்மன் கில்லுக்கு ஐசிசி மிகப்பெரிய கௌரவம் ஒன்றை வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் உலக கிரிக்கெட்டில் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கின்றார்.
அதாவது ஐசிசி ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதை வழங்கும். அந்த வகையில் ஜூலை மாதம் 2025 ஆம் ஆண்டுக்கான விருதில் இந்திய அணியின் கேப்டன் கில், இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், தென்ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த விருதுமுறையில் முதன்முறையாக ரசிகர்களின் வாக்குகளும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஐசிசி சிறந்த வீரர் ஜூலை மாதத்திற்கான விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் கில் பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161ரன்களும் மொத்தமாக 430 ரன்கள் குவித்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கில் 103 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இதனால் கில்லுக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி அந்த மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை நான்கு முறை வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டும், செப்டம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டும், பிப்ரவரி மாதம் 2025 ஆம் ஆண்டு இந்த விருதை வென்று இருந்தார்.
இந்த கௌரவம் கிடைத்த பிறகு ஐசிசி தளத்திற்கு பேட்டி அளித்துள்ள கில், ஜூலை மாதத்திற்கான ஐசிசி யின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு என்னுடைய செயல்பாடுகளுக்காக இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகின்றேன்.
பிர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நான் அடித்த இரட்டை சதம் என் வாழ்நாள் முழுவதும் என் மனதில் நிலைத்து நிற்கும். இந்த இங்கிலாந்து தொடரில் நான் செய்ததில் ஒரு முக்கியமான ஹைலைட்டாக அதை பார்க்கின்றேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது.
ஒரு கேப்டனாக நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன். இரு அணியிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வீரர்கள் வழங்கினார்கள். இந்த விருதை எனக்கு வழங்கிய நிபுணர்களுக்கு நடுவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அது மட்டுமில்லாமல் என்னுடன் பயணித்த என் சக வீரர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய இந்த சிறந்த பார்மை அடுத்தடுத்த போட்டிகளில் கொண்டு சென்று நாட்டிற்காக பல பெருமைகளை சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு என்று கூறியுள்ளார்.