துபாய்: சுப்மன் கில்லை ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் சேர்த்ததை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் ராபின் உத்தப்பா. 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் சேர்க்கப்பட்டதோடு, அவருக்குத் துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஒரு ஆண்டுக்கும் மேலாக டி20 போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரை, நேரடியாக அணிக்குள் கொண்டு வந்து துணை கேப்டனாக்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், "பிசிசிஐ தேவையில்லாமல் ஒரு பிரச்சினையைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டுள்ளது" என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிமுகமாகி, தொடரை வென்று கொடுத்தார் சுப்மன் கில். இந்த சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, அவரை டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இது ஒரு தவறான முடிவு என்கிறார் உத்தப்பா.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "சுப்மன் கில்லை மீண்டும் டி20 அணிக்குள் கொண்டு வந்ததன் மூலம், தேர்வாளர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருப்பார்கள். இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அந்த ஒரு வீரரை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். அந்தப் பாரம்பரியம்தான் இப்போதும் தொடர்கிறது என்று நான் நினைக்கிறேன்," என்று வெளிப்படையாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
உத்தப்பா தனது விமர்சனத்தை இத்துடன் நிறுத்தவில்லை. சுப்மன் கில்லின் தேர்வுக்குப் பின்னால் வணிக நோக்கங்களும் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "மார்க்கெட்டிங் மற்றும் வணிகக் கணக்குகளுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் அவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சில சூப்பர் ஸ்டார்கள் தேவை. சுப்மன் கில் அவர்களில் ஒருவராக இருப்பார்," என்று உத்தப்பா கூறியுள்ளார்.
இருப்பினும், சுப்மன் கில்லின் சமீபத்திய ஃபார்ம் மிகச் சிறப்பாகவே உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 650 ரன்களைக் குவித்த அவர், தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், கில்லின் தேர்வு ஒருபுறம் விவாதத்தைக் கிளப்பியிருந்தாலும், மறுபுறம் அவரது சமீபத்திய ஃபார்ம் நம்பிக்கையளிக்கிறது. ஆசியக் கோப்பையில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம், இந்தக் விமர்சனங்களுக்கெல்லாம் அவர் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.