திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் காரைக்குடி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மதுரை. இதன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக மதுரை முன்னேறியது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும்.
ஒவ்வொரு அணியும் முதல் சுற்று லீகில் தலா 7 ஆட்டங்களில் விளையாடுகின்றன. திண்டுக்கல்லில் நேற்று நடந்த காரைக்குடி, மதுரை ஆட்டத்துடன் அனைத்து அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்
நேற்று நடந்த ஆட்டத்தில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், ஐடிரீம் காரைக்குடி காளை அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய காரைக்குடி அணி 20 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆதித்யா 25, அனிருத்தா 48, ராஜ்குமார் 20 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய மதுரை அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மதுரையின் அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சந்திரன் 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ள மதுரை அணி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
காரைக்குடி மற்றும் திண்டுக்கல் அணிகள் தலா 8 புள்ளிகளுடனும், கோவை, தூத்துக்குடி, திருச்சி அணிகள் தலா 6 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி மற்றும் நடப்பு சாம்பியன் சேப்பாக் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை இழந்தன.