திண்டுக்கல்: டிஎன்பிஎல் வரலாற்றில் தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியடைந்து வந்தது சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி. தனது 16வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை வென்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியை வென்றது.
டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. கடந்த இரண்டு சீசன்களில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் என்ற பெயரில் விளையாடிய மதுரை அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியையே சந்தித்தது.
இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்த மதுரை அணி, தனது இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 26 ரன்களில் வென்றது டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரைக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜோன்ஸ் டூடி பேட்ரியாட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆனந்த் சுப்பிரமணியம் 44, அக்ஷய் ஸ்ரீனிவாசன் 42, எஸ். தினேஷ் 35 ரன்கள் எடுத்தனர். மதுரையின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மதுரையின் அருண் கார்த்திக் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். டி.ரோஹித் 28, ஷாஜித் சந்திரன் 29, ஜே. கவுசிக் 38 ரன்கள் எடுத்தனர். தூத்துக்குடியின் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.