"நாங்க தோற்க காரணமே இந்த பிட்ச்..".. இந்தியாவிடம் தோற்றுவிட்டு குறை சொன்ன ஜிம்பாப்வே கேப்டன்
ஹராரே: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹராரே மைதானத்தின் பிட்ச் தரமானதாக இல்லை என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது சொந்த நாட்டின் பிட்ச்சுக்கு எதிராகவே அவர் புகார் கூறி இருக்கிறார்.
ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சால் ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 64/5 ரன்களுக்குத் தவித்தது. பின்னர் வெஸ்லி மாதவெரே 39 ரன்கள், தடிவானாஷே மருமணி 27 ரன்கள் குவித்ததை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, "இந்த பிட்ச் சர்வதேச தரத்திற்கு இல்லை. காலையில் ஆட்டம் தொடங்கிய போது பிட்ச்சில் அதிக ஈரப்பதம் இருந்தது. முதல் 8 முதல் 12 ஓவர்கள் வரை புதிய பந்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் பவுண்டரிகளை அடிக்கத் தவறியதால் பந்து புதியதாகவே இருந்தது. இது இந்திய பந்துவீச்சுக்கு மேலும் சாதகமாக அமைந்தது" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஆனால், இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது பிட்ச்சில் இருந்த ஈரப்பதம் முற்றிலும் மறைந்து, பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக மாறிவிட்டது. அடுத்த போட்டியில் நல்ல பிட்ச் கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான் டாஸ் தோற்பது போட்டியைப் பாதிக்காது" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து ஏழு டி20 போட்டிகளில் வெற்றியே சந்திக்காமல் இருந்த நிலையில், இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது. இந்த தொடரின் மற்ற இரண்டு போட்டிகளிலும் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.


Click it and Unblock the Notifications
