மும்பை : இந்திய அணி 2011க்கு பிறகு இரண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகளை சந்தித்துவிட்டது. பல டி20 உலகக்கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பல தொடர்களில் அரை இறுதி, இறுதி வரை வந்து தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது.
அதற்கான காரணம் இந்திய வீரர்கள் பயமில்லாமல் கிரிக்கெட் ஆட மறுப்பது தான் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சைமன் டல் அதிரடியாக கூறி இருக்கிறார்.

மேலும், இந்திய வீரர்கள் தங்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் ரெக்கார்டுகள் மீது கவனம் செலுத்துகிறார்கள், அதனால் தான் சரியாக ஆடுவதில்லை எனவும் கூறி இருக்கிறார்.
அவர் சொல்வதை முற்றிலும் நாம் மறுத்து விட முடியாது. குறிப்பாக இந்திய வீரர்கள் பயத்துடன் ஆடுகிறார்கள் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. பல முக்கியமான போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே அதற்கு சாட்சி. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இதே தான் நடந்தது.
என்ன சொன்னார் சைமன் டல்? : "இந்திய வீரர்கள் பயமில்லாமல் கிரிக்கெட் ஆடுவதில்லை. அவர்கள் புள்ளிவிவரத்தை வைத்து கிரிக்கெட் ஆடுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த புள்ளிவிவரங்களை (ரன்கள், சதம், விக்கெட்கள், ரெக்கார்டு உள்ளிட்டவை) குறித்தே அதிகம் கவலை கொள்கிறார்கள். அந்த ஒரு விஷயத்தில் தான் அவர்கள் பேட்டிங் எனக்கு கவலை அளிக்கிறது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால், ஒரு தொடரின் சரியான சமயத்தில் பயமில்லாமல் கிரிக்கெட் ஆட வேண்டும். அதுதான் அவர்களை கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களில் கீழே தள்ளி இருக்கிறது. அவர்கள் தைரியமாக ஆட, ரிஸ்க் எடுக்க மறுக்கிறார்கள். தங்களைப் பற்றி விமர்சனம் எழுதிவிடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்" என சைமன் டல் கூறி இருக்கிறார்.
தற்போதுள்ள இளம் இந்திய வீரர்கள் விமர்சனத்துக்கு அஞ்சுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளலாம். அதே சமயம், பெரிய தொடரில் முக்கியமான போட்டிகளில் பயமில்லாமல் ஆடுவதும் இல்லை என்பதும் உண்மையே. 2023 உலகக்கோப்பை தொடரிலாவது இவற்றை இந்திய அணி மாற்றிக் கொள்ள வேண்டும்.