
27ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 தொடர்கள் வரும் 27ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி துவங்கி ஜனவரி வரையில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

சிராஜின் தந்தை மறைவு
ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 மேட் -இன் ஓவர்கள் சாதனையையும் புரிந்த முகமது சிராஜ் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரது தந்தை முகமது கௌஸ் உயிரிழந்துள்ளார். அவரது மறைவையொட்டி சிராஜ் இந்தியா திரும்பவில்லை.

சிறப்பாக ஆட அறிவுறுத்தல்
இந்நிலையில், தந்தையின் மறைவையொட்டி சிராஜ் இந்தியா திரும்ப முடிவு செய்ததாகவும் ஆனால் நடந்தது நடந்துவிட்டது, இனி சிராஜ் தனது ஆட்டத்தை சிறப்பாக மேற்கொள்வதுதான் தனது தந்தைக்கு செய்யும் கடமை என்று தான் அறிவுறுத்தியதாகவும் சிராஜின் மூத்த சகோதரர் இஸ்மாயில் கூறியுள்ளார்.

அதிகமாக பாதிப்பு
மறைந்த தன்னுடைய தந்தைக்கு மிகவும் நெருக்கமாக சிராஜ் இருந்ததாகவும் அவரது மறைவு அவரை அதிகமாக கலங்கடித்துள்ளதாகவும் இஸ்மாயில் கூறினார். தொலைபேசி மூலம் சிராஜிடம் பேசும்போதெல்லாம் அவர் கண்கலங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள இஸ்மாயில், அவருக்கு கடவுள்தான் மனவலிமையை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆறுதல் அளிக்கும் சக வீரர்கள்
தந்தையின் மறைவு தனக்கும் மிகப்பெரிய சோகத்தை அளித்துள்ள போதிலும், தன்னை சுற்றி தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலியாவில் சிராஜ் தனியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட இஸ்மாயில், ஆனால் இந்திய அணி வீரர்கள், அவருக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்து வருவதாகவும் மேலும் கூறினார்.

தந்தைக்கு காணிக்கையாக்குவார்
இந்த நெருக்கடியான நேரத்தில் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கும் இஸ்மாயில் நன்றி தெரிவித்தார். மேலும் டெஸ்ட் தொடரில் அணிக்கு உதவி செய்து கோப்பையை வென்று அதை தன்னுடைய தந்தைக்கு சிராஜ் காணிக்கையாக்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications