கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற குமார் சங்ககாராவுக்கு இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் பதவி வழங்க தயாராக உள்ளதாக கிரிக்கெட் மைதானத்தில் வைத்தே அறிவித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றது. அப்போட்டியுடன் சங்ககாரா ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்தார் சங்ககாரா. தற்போது இலங்கையில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிந்தது. இப்போட்டியுடன், சங்ககாரா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மைதானம் முழுக்க ரசிகர்களால் குழுமப்பட்டிருந்தது. சங்ககாராவின் பெற்றோர்கள், மனைவி, நண்பர்கள், இலங்கை அதிபர் சிறிசேனா போன்றோரும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும்போது, சிறிசேனாவுக்கு மைக்கில் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது சங்ககாராவை புகழ்ந்து பேசிய சிறிசேனா, "இங்கிலாந்துக்கான இலங்கை தூதராக சங்ககாராவை நியமிக்க முடிவு செய்துள்ளேன்" என்று அறிவித்தார்.
இதுகுறித்து சங்ககாரா தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.